This entry is part 10 of 18 in the series 5 மார்ச் 2023

சாந்தி மாரியப்பன்.

ததும்பும் பேரன்புடன் வலி சொன்னது
நீ
எனக்கு அடிமையாயிரு
என்னை ஆராதி
தியானித்தாலோ கதி மோட்சம் கிட்டும்
முடிந்தால்
புண்பட்ட உடலோ மனதோ
இன்னுங்கொஞ்சம் கீறிக்கொள்
வலி கொண்ட மனதென்றால் எனக்குப்பிரியமதிகம்
உனக்கும் பொழுது போகும்
சிரங்குற்ற குரங்கின் கதையை
கேள்வியுற்றிருப்பாய்தானே நீ
ஆயுதங்களைப்போட்டு விட்டு
சரணடைந்து விடு
எதிரிகள் இல்லாவிடத்தில்
நாய்க்குட்டியாய்ச் சுருண்டிருப்பேன் நான்

******************ஒவ்வொரு முறையும்
ஒரு குளிர் அலையைப்போல்
வலி வந்து மூடும்போது
விதிர்விதிர்த்துத் துடித்தடங்கும் உடம்பில்
எங்கோதான் இருக்கிறது
உடல்நடுக்க மையம்
மெல்லெனக்கிளம்பி திடீர்க்கணத்தில்
பின்னந்தலையில் சொடுக்கும்
குரூர வலியிடம் இறைஞ்சுவதற்கு யாதுளது
கர்மாவோ கடனோ
அனுபவித்துக்கழிப்பதொன்றே செய்யக்கூடியது

இருப்பையுணர்த்தும் அவசியம் எனக்கு
உண்மையில்
உன்னை நானென்ன செய்ய வேண்டுமென்று
நீதான் தீர்மானிக்க வேண்டும்
கங்கையாய்த் தாங்குவாயா
அல்லது
முயலகனாய் அடக்கி வைப்பாயா
சட்டெனச்சொல்
காலம் சொட்டிக்கொண்டிருக்கிறது விரைவாக

யுகம் கழிந்தும் பதிலில்லாததால்
வலி
உடல்நடுக்கப்புள்ளியில் மையம் கொண்டது
ஒரு
கருக்குழந்தையாய்.

Series Navigationகுவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023