This entry is part 14 of 32 in the series 3 பிப்ரவரி 2013

அக்னிப்புத்திரன்

தமிழ்நாட்டில் கமலின் விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் அரசியல் விளையாடிவிட்டதாகவே தெரிகிறது. முஸ்லீம் தோழர்கள் அதிகம் வாழும் மலேசியாவில் படம் ரிலீஸ் செய்யப்பட்டு படம் ஓடியதும் பின் தாய்நாட்டு முஸ்லீம் தோழர்களின் அறிவுத்தலால் அங்கும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோல கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் அதிகமாக வாழும் முஸ்லீம் சகோதரர்கள் இருந்தும் படம் ரீலிஸ் செய்யப்பட்டதை கணக்கில் எடுத்துக்கொண்டால் இது அப்பட்டமாக ஜெயா டிவிக்காக முதல்வர் ஜெயாவால் அரங்கேற்றப்பட்ட திருவிளையாடல் என்பதில் சற்றும் ஐயமில்லை. அப்பாவி முஸ்லீம் மக்களைப் பகடைக்காயகப் பயன்படுத்தி உருட்டி விளையாடுகிறார்கள். அரசு நினைத்திருந்தால் எவ்விதமான தடங்கல்களும் இல்லாமல் படத்தைத் திரையிட்டு இருக்க முடியும்.  துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிரச்சினை வந்தபோது எவ்வளவு விரைவாகப் பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டது. ஏன் அந்தச் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் விஸ்வரூபத்தில் இல்லை. காரணம் துப்பாக்கி திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமை ஜெயா டிவி வசம்!

இந்து மற்றும் இஸ்லாம் போன்ற மதங்களின் நம்பிக்கை சடங்குகளைக் கேலி செய்யும் எண்ணற்ற படங்கள் வெளிவந்துவிட்டன. அப்போது எல்லாம் இல்லாத அளவு இப்போது இந்தப் படத்திற்கு மட்டும் ஏன்  இவ்வளவு பெரிய சலசலப்பு? என்ன காரணம்?  சிந்திக்க வேண்டிய விஷயம்.

இந்து முஸ்லீம் சகோரர்களின் ஒற்றுமையை ஒரு திரைப்படமா பிரித்துவிடும்? அவ்வளவு பலவீனமாகவா உள்ளது இந்து முஸ்லீம் ஒற்றுமை? இல்லவே இல்லை.  வலுவான நல்ல ஒற்றுமை இருப்பதால்தான் மொழி, இனம், மதம் என்று பல வேறுபாடுகள் இருப்பினும் ‘இந்தியன்’ என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். அண்டை மாநிலங்களில் இதே திரைப்படம் ஓடும்போது  தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திரையிட்டிருக்க முடியாது? சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாகவா உள்ளது தமிழகத்தில்? கமலின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு மட்டும் ஏன் தடைக்கு மேல் தடை?

பரவலாக பலரும் வெளிப்படுத்தும் கருத்துகள் இவை.

 

  1. ஜெயா டிவிக்கு சேட்டிலைட் உரிமை தருவதாக முதலில் கூறிய கமல், ஜெயா டிவி நிர்வாகம் அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசியதும் அதன் காரணமாக விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு அத்திரைப்படத்தை விற்பனை செய்துவிட்டதை அறிந்த மேலிடத்தின் கடுங்கோபமே முக்கியக் காரணம்!

 

  1. வேட்டி கட்டிய தமிழரைப் பிரதமராகப் பார்க்க விரும்புகிறேன் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் புகழ்ந்து ஒரு விழாவில் கமல் பேசியது, பிரதமர் கனவில் மிதக்கும் சக்திக்கு ஏற்படுத்திய  ஆத்திரத்தின் வெளிப்பாடே இது.

 

  1. இஸ்லாம் மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் பல காட்சிகள் உள்ளன என்று கூறி, சில இஸ்லாம் அமைப்புகளின்  எதிர்ப்பே தடைக்குக் காரணம்.

 

  1. இப்படத்தை திரையிட்டால் மத ஒற்றுமை குலைந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் நல்லெண்ணத்தின் வெளிப்பாடே இந்தத் தடைக்குக் காரணம்!

 

இந்த நான்கு காரணங்கள் தாம் பிரதானமாக ஊடக வாயிலாக வெளியிடப்பட்டு வருகின்றன.

 

சர்ச்சைக்குரிய எந்தப் படங்கள் வந்தாலும் நாலு பேர் எதிர்ப்பது என்பது இந்தியத் திரைப்படத்துறையினர் காலங்காலமாகச் சந்தித்து வரும் ஒரு பிரச்சனையாகும். அதை வளரவிடாமல் சம்பந்தபட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாகப் படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு அண்மைய துப்பாக்கித் திரைப்படமும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

 

ஆனால், தணிக்கை முடிந்து திரையிடப்பட்ட விஸ்வரூபம் திரைபடத்திற்கு மட்டும்  தமிழக அரசாங்கமே முன் வந்து தடை விதித்தும் அத்தடையை நீதிமன்றம் நீக்கிய பின்பும் ஆக்ரோஷத்துடன் இரவோடு இரவாக மீண்டும் நீதிமன்றத்தை அணுகி மீண்டும் தடை வாங்கியதோடு மட்டுமில்லாமல் ஆங்கங்கே படத்தை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களையும் கமல் ரசிகர்கள் மற்றும் படத்தைக் காண வந்த பொது மக்களையும் காவல்துறையினரைக் கொண்டு மிகுந்த கெடுபிடிக்கு ஆளாக்கியதோடு அராஜகத்திலும் ஈடுபட்டது ஏன்?

 

ஜெயா டிவிக்குக் கிடைக்காத சினிமாவை ஒருசில முஸ்லீம் அமைப்புகள் எதிர்க்க…சறுக்கியவனுக்கு இதுவே சாக்கு என்பது போல தமிழக முதல்வர் ஜெயா இதைக் கையில் எடுத்துக்கொண்டு சொந்த விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்டு பழிவாங்கி, பிரச்சனையைப் பெரிதுபடுத்திப் பெரிய அளவில் பேச வைத்துவிட்டார் என்றே படுகிறது.  அதிகாரம் கையில் உள்ளது என்பதற்காக முதல்வர் ஜெயாவின் இந்த விஸ்வரூபத்தால், ஒரு நல்ல கலைஞரை அநியாயமாகக் கண்கலங்க வைத்த நிகழ்வு தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. அனைவருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வு தனி ஒரு கலைஞனுக்கு மட்டும் ஏற்பட்ட அவமரியாதை இல்லை. ஒட்டுமொத்த  தமிழகத்திற்கே ஏற்பட்ட அவமரியாதையாகும்.

யாரை எங்கே எப்படி வைக்கனும் என்று யாருக்கும் புரியலை. அட அண்டங்காக்காவுக்கும் குயிலுக்கும் பேதம் தெரியலை!

                                          – அக்னிப்புத்திரன்

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………15. ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன் – ‘டி.கே.சியின் கடிதங்கள்’.கைரேகையும் குற்றவாளியும்