பத்மநாபபுரம் அரவிந்தன்
நானொரு ஏவுகணை
எனக்கென்று மதமில்லை
நாடில்லை மொழியில்லை
சதையுடைந்து தெறிக்கின்ற
உதிரத்தின் மணம் கூட
எனக்கேதும் தெரிவதில்லை
நீ நினைக்கும் இடத்திற்கு
என்னை இயக்கி
பெருவானில்
மிகுவேகமெடுத்து
நீ தகர்க்க நினைத்த உயிர்களோடு
இடத்தினையும்
ஒருமித்து அழித்து
என்னையும் அழிக்கும் நான்
ஏனென்றோ
எதற்காக செய்தேனென்றோ
ஒன்றுமே புரியாமல்
என்னுயிர்
அழிந்து கிடக்கின்றேன்..
என்னை எத்தனை பத்திரமாய்
இத்தனைநாள் காத்து வந்தாய்
நான் வெடித்து சிதறுகையில்
பச்சிளம் குருந்துகளும்
துகள்களாய் சிதறி அழிகையில்
நான் படும் வருத்தம்
உனக்கு சிரிப்பாகும்..
உன் யுத்த சரித்திரத்தில்
என் பெயர் நிலைத்திருக்கும்
நான் கொன்ற உயிர்களின்
உறவின் உதடுகளில்
சாபமாய் உறைந்திருக்கும்
நானொரு ஏவுகணை
எனக்கென்று மதமில்லை
நாடில்லை மொழியில்லை
சதையுடைந்து தெறிக்கின்ற
உதிரத்தின் மணம் கூட
எனக்கேதும் தெரிவதில்லை
அழிக்கப் பிறந்த உந்தன்
எண்ணத்தின் ஏவுதலில்
பயணித்து உடைக்கிறேன்
உடைகிறேன்..
இனி உலக அழிவின்
பெரும்பங்கே எமக்கென்று
பெருமைகொள்ள முடியவில்லை
நீயே உருவாக்கி உனையே
நீ அழிக்க உன்னால் ஏவப்படும்
நானொரு ஏவுகணை
எனக்கென்று மதமில்லை
நாடில்லை மொழியில்லை
சதையுடைந்து தெறிக்கின்ற
உதிரத்தின் மணம் கூட
எனக்கேதும் தெரிவதில்லை ..
- 2026 – எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது – விருது பெறும் எழுத்தாளர்
- செம்போத்து
- மழை புராணம் : 24 : வெறுப்பின் குடை
- தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள்: இந்தியாவுக்கு உண்மையிலேயே பலன் தருகிறதா?
- ஒரு ஏவுகணையின் புலம்பல்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து மா. அரங்கநாதன் எழுதிய “காடன் மலை” சிறுகதை