தன் மழை
தாத்தா தோளிலிருந்து
பிஞ்சு விரல் மொக்கால்
உள்ளங்கையில் மழை கவ்வி ஏந்தும் குழந்தை
சளி புடிச்சிடும் என்பார் தாத்தா
அவருக்குள் இருக்கும்
பழைய மழை நினைவில் கொண்டு
தாத்தா தலை திரும்பியதும்
மறுபடி மழை பிடிக்கும் குழந்தை விரல் நீட்டும்
புதுப் புது மழை தேடி
உடையெல்லாம் நனைந்து
மழைக்குள் நனைந்து
தன் மழை என்ற ஒன்றை அடையாளம் காணும்!