This entry is part 3 of 8 in the series 19 ஏப்ரல் 2026


வசந்த தீபன்

__________________________

காலங்களைப்

பட்டைகளாக 

தரு

அணிந்து இருக்கிறது

கனவுகளைக்

கிளைகளாக 

திசை எட்டும் 

நீட்டுகிறது.

இலைகளாக

கிளைத்திருக்கின்றன

அதன்

நூறு இருதயங்கள்.

மண்ணில் ஊன்றியிருக்கும் 

ஆணிவேர் வாயில்

சல்லிவேர்களாய் 

ஆயிரம் நாவுகள்

நீர்மையை சேகரிக்கின்றன.

தொடர் நிலங்களுக்கு ஊடாக 

செழிப்பை பரத்துகிறது.

பச்சையின் குளிர்மையாக 

உயிர்களுக்குள் 

ஊடுருவுகிறது.

காற்றின் மாசுகளை

உள்வாங்கி

அமுதத்தை 

வெளிகளில் நிரப்புகிறது. 

நிழலிட்டு

ஆற்றுப்படுத்தி

கனிகளால்

உயிர்களுக்கு உயிரூட்டுகிறது. 

கோடாரிகளும் 

ரம்பங்களும்

அரிவாள்களும் 

அறுத்தெடுப்பது

தருவையல்ல

இகத்தின்

வாழ்வை.

Series Navigationஎன்றும் இதே நிலைகள்நளபாக நாஜிக்கள் !