மழையும் நானும்
**************************
ஒரு மழை எப்போது துவங்குமென
நான் ஏன் தீர்மானிக்க விரும்புகிறேன்?
தோட்டத் தரையிலும்
மர இலைகளிலும்
விடாமல் ஊற்றிக் கொண்டாடும் துளிகளையும்
அதன் பச் ! பச் சப்தத்தையும்
என் செவி எதனால்
ஒரு அமைப்புக்குள் கொண்டு வர நினைக்கிறது?
செவியில் வேறு எந்த ஒலியும் அற்றதாலா?
ஈரமான தட் தட் சொட்டுகளால்
அக் குடைபடும் தட்டல்களை
விலக்கி
மடித்து வைக்க முடியாதபடி
என் அகந்தை
எங்கும் உறங்குகிறதோ இந்த இரவில்?
மழை சப்தம்
மண் கொண்ட நீரில் மோதி
இன்னும் சப்தம் எழ செய்து கொண்டுதாம் உள்ளது
விளக்கவே முடியாத இந்த தொடர் சப்தம்
என்னுள் கேட்டுக் கொண்டபடியே
உறங்கச் செல்கிறேன் அயர்வுடன்
ஆனால்
இப்போது மழையில்
தோல்வியடைந்த அமைதி மற்றும் நிம்மதியுடன்.
– பா.சத்தியமோகன்