This entry is part 6 of 13 in the series 9 ஆகஸ்ட் 2026

எழுதும்

போதெல்லாம்

அமரமுடியாமல்

ஆழிமேல் பறக்கும்

புறாவாகிறது

வலிகளைக்

கண்ணீரில் எழுதி

முற்றுப்புள்ளியில்

புன்னகைக்கிறது

ஊசிநூலாகி

கவிதை தைக்கிறது

நடையறியாக் காட்டில்

பாதை செய்கிறது

கொடுத்தோர்

பறித்தோர்

கீறியோர்

நீவியோர்

சுட்டோர்

சுரண்டியோர்

கல்லெறிந்தோர்

பூவெறிந்தோர் என

மழைமழையாய்

ஞாபகங்கள்

மனசில் விழுந்து

சொற்களாகி

மண்ணில் தவழ்ந்து

ஆறாய் நடந்து

கடலில் முடிகிறதோ?

அது முடிவா?

முகவுரையா?

தென்றலாய்

முகிழாய்

இருளாய்

ஒளியாய்

இடியாய்

மின்னலாய்

புயலாய்

பூகம்பமாய்

ஓயாப் பயணத்தில்

எழுத்து

அமீதாம்மாள்

Series Navigationமுத்தும் மீனும்வாய்ப்பின் சாத்தியத் துள்ளல்