ராஜு ஆரோக்கியசாமி
திண்ணை
காலங்களின்
மௌன சாட்சி.
தாத்தாவின் வெற்றிலைப் பெட்டியும்,
பாட்டியின் அரிசி புடைக்கும் முறமும்
உறவாடிய இடம்.
மதிய வெயிலின் தணல் தணியும் நேரத்தில்,
சின்னஞ்சிறு குருவிகள்
வந்து செல்லும் அன்பின் வாசல்.
தெருவோரப் பாதசாரியின்
அயர்வு தீர்க்கும்
இலவச நிழல்.
மாலை நேரங்களில்
ஊர்க் கதைகள் உயிர்பெறும்
திறந்தவெளி அரங்கம்.
இன்று
சுவர்களுக்குள் சுருங்கிவிட்ட
மனித உறவுகளுக்கு நடுவே
வெளியே திறந்தே கிடக்கிறது
அந்தக் காலத் திண்ணை!
# ராஜு ஆரோக்கியசாமி